சிறை தண்டனை குறித்த தீர்ப்பு.. இயக்குனர் லிங்குசாமி விளக்கம்..!

  • IndiaGlitz, [Thursday,April 13 2023]

காசோலை வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என இயக்குனர் லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்தது. அவர் பிவிபி என்ற நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும் அந்த கடனுக்கான தொகையை காசோலை மூலம் கொடுத்த நிலையில் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் லிங்குசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து இயக்குனர் லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிடல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிரைவேட் மீடியா இடையில் ஆனது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.