வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றினாரா??? ஊடகங்கள் கூறும் தகவல்களின் தொகுப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

 

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த 20 நாட்களில் முதல் முறையாக பொதுவெளியில் தென்பட்டார் என்று வடகொரிய அரசு ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டு இருக்கின்றன. வடகொரிய அதிபர் உயிரிழந்துவிட்டர் என்று வெளியான செய்திகளுக்கு மத்தியில் தற்போது அதிபர் உர தொழிற்சாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார் என்று வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வடகொரிய மத்திய செய்தி நிறுவனமான KCNA, தலைநகர் பியோங்காங்கிற்கு அருகிலுள்ள சன்ச்சியோனில் ஒரு உரத் தொழிற்சாலை நிறுவனம் ஆண்டு நிறைவு விழாவை நடத்தியதாகவும் அதில் அதிபர் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதிபருடன் அவரது தங்கை மற்றும் ஆளும்கட்சி ஆட்சிமன்றக்குழுவின் உறுப்பினராக செயல்படும் கிம் யோ ஜாங் உடன் இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றதாகவும் கூறியுள்ளது. இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாகச் சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிபர் ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதும் மற்றும் உர ஆலையைச் சுற்றிப்பார்ப்பது போன்ற நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. அதிகாரப் பூர்வமான வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களை நம்ப முடியவில்லை எனறு ரோடாங் சின்முன் செய்தி ஊடகம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

KCNA ஊடகத்தின் செய்தி குறித்து அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்பிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டபோது, அவர் கருத்துச் சொல்ல மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக வடகொரிய அதிபரின் உடல் நிலை மற்றும் அவரது இறப்பு குறித்து பல்வேறு செய்திகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

காரணம் வடகொரியாவை நிர்மானித்த அதிபரின் தாத்தாவான கிம் 2 சங் அவர்களின் பிறந்தநாள் கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வடகொரியாவை பொறுத்தவரை இந்த நாள் மிகவும் முக்கிய தினமாகக் கருதப்படுகிறது. அதிபர் அதில் பங்கேற்கவில்லை என்றவுடன் அவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. கடந்த 11 ஆம் தேதி அதிபர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொண்டார். இதுகுறித்து அன்றைக்கு வடகொரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அதற்கு பின்னர் அதிபரைப் பற்றிய எந்த செய்திகளும் வெளியாகவில்லை. அதிபருக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது எனவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்திருக்கிறது எனவும் அமெரிக்கா செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், அமெரிக்க உளவு நிறுவனத்தின் தகவல்கள் அடிப்படையில் அதிபருக்கு சில ஆண்டுகளாக உடல்நலக் கோளாறுகள் அதிகமாக இருந்ததால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார் எனவும் செய்திகள் வெளியாகின.

மேலும், அதிபர் கிம் ஜாங் உன்னின் சிறப்பு விமானம் தலைநகர் பியாங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 38 நார்த் என்ற தனியார் நிறுவனம் சாட்டிலைட் மூலமாக வடகொரியவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்நிறுவனம் ரெசார்ட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் அதிபர் கிம் ஜாங் உன்னின் குடும்பத்துக்குச் சொந்தமான ரயில் நிறுத்தப்பட்டுள்ள புகைப்படத்தை கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டு இருந்தது. ரெசார்ட் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வென்சான் நகரில் அதிபரின் மாளிகை இருக்கிறது. இந்த ரயில் கடந்த 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அதே ரெசார்ட் நகர் ரயில் நிலையத்தில் நின்றதாகவும் கூறப்பட்டது. இந்தப் புகைப்படத்தின்படி அதிபர் கிம் ஜாங் உன் தலைநகரில் இருந்து தனது சொந்த மாளிகைக்கு சென்றிருக்கலாம் எனத் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு இருந்தன.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் வைத்து செய்தி ஊடகங்கள் அவர் கடுயைமான உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவர் இறந்துவிட்டார் எனவும், வடகொரியா ஒரு பெரிய இறப்பு ஊர்வலத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது எனவும் பல செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில் இன்று காலை வடகொரிய அரசு ஊடகம் அதிபர் உரத் தொழிற்சாலை நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டார் என அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இச்செய்தியை நம்பமுடியவில்லை எனவும் சில ஊடகங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வெளிநாட்டில் இருக்கும் கேப்டன் மகனை போட்டோஷூட் எடுத்த பிரபல இயக்குனரின் மகன்

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஏற்கனவே 'சகாப்தம்' மற்றும் 'மதுரை வீரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

அஜித்தின் 'கண்ணான கண்ணே' பாடலை இசைத்த பிரபலத்தின் மகள்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் பட்டிதொட்டியெங்கும்

தமிழகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட் சென்றால் சலுகை விலையில் அனைத்து காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் என்று எண்ணி சென்ற பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாததால் தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

சென்னையில் 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத 7 பகுதிகள்!

சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவும் பகுதி என 7 பகுதிகளை கண்டறிந்த அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட

ஒரே தெருவில் 19 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்,