தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட்  தந்த தயாரிப்பாளர் தாணு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தனுஷ் தற்போது அமெரிக்காவில் ஹாலிவுட் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. அது மட்டுமின்றி பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைவதால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.