குறும்படத்திற்கு ஓகே சொன்ன தனலட்சுமி.. பரபரப்பான பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நடைபெற்றது என்பதும் இந்த டாஸ்க் அமைதியாக இருந்த பல போட்டியாளர்களை வீராங்கனைகள் ஆக்கியது என்பதும், சதிகாரர்களையும் விஷமத்தனமானவர்களையும் வெளிச்சம் போட்டு காட்டியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த டாஸ்க்கின் போது ஷெரினாவை தனலட்சுமி தள்ளிவிட்டதாக திடீரென குற்றம்சாட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசீம், மகேஸ்வரி, ஏடிகே, அசல் கோலார் உள்ளிட்டவர்கள் தனலட்சுமி மீது குற்றம் சாட்டினார் என்பதும் அசீம் ஒருபடி மேலே போய் தனலட்சுமியை ’நீயெல்லாம் ஒரு பெண்ணா என்று திட்டினார் என்பதும் தெரிந்ததே.

ஆனாலும் தனலட்சுமி ’நான் தப்பே செய்யவில்லை என்றும் தான் ஷெரினாவை தள்ளிவிடவில்லை என்பதில் உறுதியாக இருந்தார். மேலும் தனலட்சுமி, ‘நான் தவறு செய்திருந்தால் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே போக தயார் என்றும் ஆனால் நான் தவறு செய்யவில்லை என்றால் என்னை குற்றம் சாட்டிய ஒவ்வொருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் முன் இது குறித்த விசாரணை இன்று வருகிறது. ‘அப்போது தப்பே செய்யவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்களா? என தனலட்சுமியிடம் கமல்ஹாசன் கேட்க, ‘நான் தவறு செய்யவில்லை. என்மீது குற்றம் சாட்டியவர்கள் அசீம், அசல் கோலார், மகேஸ்வரி மற்றும் ஏடிகே என தைரியமாக கூறினார். மேலும் நான் தப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் அனைவர் முன் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே செல்லவும் தயார் என்றும் கமல்ஹாசனிடம் தனலட்சுமி கூறினார்.

இதனை அடுத்து குறும்படம் போடவா? என்று கமல் கேட்க அதற்கு தனலட்சுமி ஓகே சொல்லிய நிலையில் குறும்படம் போடப்படுகிறது. இந்த குறும்படம் போடப்பட்ட பின் என்ன நடந்திருக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து கொள்வோம்.