ஒரு மருத்துவமனையில் 80 மருத்துவர்களுக்கு கொரோனா? அப்போ நோயாளிகள்?

டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 80 மருத்துவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் கொரோனா நோயால் உயிரிழந்து இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுக்கவே பல்வேறு நெருக்கடி நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை இல்லாமலும் ஆக்சிஜன் பற்றாக்குறையோடும் மருத்துவர்கள் அல்லாடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லி சரோஜ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 80 மருத்துவர்களுக்கு கடந்த சில தினங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் புறநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என இந்த மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாதிப்பு ஏற்பட்ட மருத்துவர்களில் 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் 27 பேர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டும் இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த பெண் கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 80 மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.