தவறான தகவலை பரப்ப வேண்டாம்: ரஜினி கட்சி நிர்வாகி குறித்து தயாநிதி மாறன் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்

மேலும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது உட்பட முக்கிய பணிகளுக்காக அர்ஜூனா மூர்த்தி என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இந்த அர்ஜுனா மூர்த்தி என்பவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உதவியாளர் மற்றும் ஆலோசகராக இருந்தவர் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது

அது மட்டுமின்றி முரசொலி மாறனின் குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர் ஒருவர் ரஜினி கட்சியில் சேர இருப்பதாகவும் வதந்தி பரவியது. இந்த நிலையில் இதுகுறித்து தயாநிதி மாறன் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்கள் ரஜினிகாந்த் அவர்களால் துவக்கப்பட உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனா மூர்த்தி எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அதுபோன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு தயாநிதிமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்