இரண்டாவது திருமணம் செய்து வைத்த மாமனார்! கதற கதற தீ வைத்து கொளுத்திய மருமகள்!

  • IndiaGlitz, [Friday,May 10 2019]

மாமனார் தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால், ஆத்திரமடைந்த முதல் மனைவி மற்றும் அவருடைய தாயார் உறங்கிக் கொண்டிருந்த மாமனார் மீது மண்ணெண்ணையை ஊற்றி உயிருடன் எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நெமிலி காலனி பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவர் தன்னுடைய மகன் பிரபாகரனுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன் காயத்ரி என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இருவருக்கும் பரத் என்கிற மகன் உள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காயத்ரி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை சமாதானம் செய்ய பிரபாகரன் முயற்சி செய்தும் அவர் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வரவில்லை. இதனால் பிரபாகரனின் தந்தை சபாபதி, தன்னுடைய மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த 11ம் தேதி காயத்ரி என்கிற பெண்ணுக்கும் பிரபாகரனுக்கும் திருமணம் நடந்தது.

இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி காயத்ரி, தன்னுடைய கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மாமனார் சபாபதியை தன்னுடைய தாயுடன் சேர்ந்து, அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்தார்.

இதில் படுகாயமடைந்த சபாபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரிடம் நீதிபதி ரோஸின் வாக்குமூலம் பெற்ற பொது இந்த தகவலை அவர் தெரிவித்தார். எனினும் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் தீக்காயம் அதிகமாக இருந்ததால் சபாபதி உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காயத்ரி மற்றும் அவருடைய தாய் கலைவாணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.