கேரளாவில் எக்ஸ்-இ கொரோனா? 4 ஆம் அலைக்கு அறிகுறியா?

  • IndiaGlitz, [Saturday,April 23 2022]

கொரோனா நோய்த்தொற்றின் 3 ஆம் அலைத் தாக்கத்தில் இருந்து மீண்ட இந்தியா சமீபத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது. இந்நிலையில் கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு உருமாறிய எக்ஸ்-இ வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அச்சத்தை தருகிறது.

சீனாவில் கடந்த சில வாரங்களாக உருமாறிய எக்ஸ்-இ கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதே எக்ஸ்-இ வைரஸ் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டு இருக்கிறது. கேரளாவில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 21 இளைஞர் ஒருவருக்கு புது உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்த அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளின் அந்த இளைஞரின் ரத்த மாதிரியை ராஜீவ்காந்தி பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த இளைஞருக்கு எக்ஸ்-இ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் இந்த இளைஞரோடு தொடர்பில் இருந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு கொல்லம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் எக்ஸ்-இ கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 4 ஆம் அலை பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.