ஜெ.குறித்த சர்ச்சை கருத்து கூறியது ஏன்? கைதான ராமசீதா பரபரப்பு வாக்குமூலம்

  • IndiaGlitz, [Sunday,February 26 2017]

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராமசீதா என்பவர் தன்னை அப்பல்லோ டாக்டர் என்று அறிமுகம் செய்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள் என்றும், தான் அந்த மருத்துவமனையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் பரபரப்பு தகவலை கூறினார்.

இந்நிலையில் அவர் மீது அப்பல்லோ நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் டாக்டரே இல்லை என்பதும், அவர் ஒரு நியூட்ரிசீயன் மற்றும் டையட்ரிசீயன் என்பதும் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியவில்லை என்பதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையின்போது அவர் கொடுத்த வாக்குமூலம் இதோ:

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீது எனக்கு அளப்பரிய அன்பும், பற்றும் இருந்தது. அவரது மறைவு என்னை மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் அவரை பின்பற்றி நாமும் அரசியலில் களம் இறங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

அப்போது ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தனி கட்சி தொடங்கபோவதாக அறிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. இதுகுறித்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக செய்திகள் வெளியாகியபடி இருந்தன. எனவே நாமும் ஏதாவது தகவல் சொன்னால் மிகப்பெரிய அடையாளம் கிடைத்துவிடும். இதன் மூலம் தீபா தொடங்கும் கட்சியில் இணைந்து மிகப்பெரிய பொறுப்பை வாங்கி விடலாம். அரசியலில் பெரிய இடத்துக்கு வந்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டேன்.

தனிநபராக கருத்து சொன்னால் யாரும் திரும்பி பார்க்கமாட்டார்கள் என்பதால், டாக்டர் என்று சொல்லி ஜெயலலிதா மரணம் குறித்து பொய்யான தகவலை பரப்பினேன். நான் நினைத்தபடி என்னுடைய பேச்சை அனைவரும் நம்பி விட்டனர். பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. எப்படியும் நமக்கு தீபா கட்சியில் பெரிய பொறுப்பு கிடைத்துவிடும் என்ற ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் தற்போது என்னுடைய வே‌ஷம் கலைந்துவிட்டது.

இவ்வாறு ராமசீதா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.