தாய்க்கிழவி பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம்: சென்னை திரையரங்கில் ஸ்க்ரீன் கிழிந்ததால் பரபரப்பு

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இன்று வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவதால் இந்த படம் தனுஷின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் அனிருத் இன்று காலை சென்னை கோயம்பேடு அருகே உள்ள திரையரங்கில் ரசிகர்கள் முன் தோன்றினர் என்பதும், அவர்களை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து கரகோஷம் எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’தாய்க்கிழவி’ என்ற பாடல் இடம்பெற்ற போது ரசிகர்கள் ஸ்கிரீன் அருகில் சென்று செம ஆட்டம் ஆடினார்கள். அப்போது ஸ்கிரீன் கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழிந்த ஸ்கிரீனோடு மீதி படம் திரையிடப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஸ்கிரீன் பழுது பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் ஆர்வமிகுதி காரணமாக ஸ்கிரீன் கிழிந்ததால் திரையரங்க வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.