ஜெ. மரணம் இயற்கையானதா?- உச்ச நீதிமன்றத்தில் மனு

  • IndiaGlitz, [Wednesday,December 14 2016]

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் அவரது இழப்பிலிருந்து தமிழக மக்களும் அஇஅதிமுக வின் கோடான கோடி தொண்டர்களும் மீளவில்லை. தினமும் ஆயிரக் கணக்கானோர், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

செப்டம்பர் 22 அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 73 நாள் போராட்டத்துக்குப் பிறகு டிசம்பர் 5 இரவு 11:30 மணி அளவில் உயிர்நீத்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

'ஜெயலலிதா குணமடைந்துவருகிறார், விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்' என்று சொல்லப்பட்டுவந்த நிலையில் அவரது திடீர் மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் அவரது ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை; வெளியாட்கள் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசகதி என்ற சென்னையைச் சேர்ந்த அமைப்பு ஜெயயலலிதாவின் மரணத்தைப் பற்றி எழுப்பட்டுவரும் சந்தேகங்களைக் களைய உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

இன்று உச்சநீதிமன்றத்தில் அவ்வமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் ஜெயலலிதாவின் மரணம் டர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், முன்னாள் முதல்வருக்கு அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் நடிகை கவுதமி, ஜெயயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.