கொரோனா தடுப்பூசி குறித்து தயக்கமா? பாலூட்டும் தயார்மார்களுக்கு எளிய விளக்கம்!

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

கொரோனா தடுப்பூசியை இதுவரை 18 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் பாலூட்டும் தயார்மார்களும் கொரோனா தடுப்பூசியை பயம் இல்லாமல் செலுத்திக் கொள்ளலாம் என ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) விளக்கம் அளித்து இருக்கிறது.

அதாவது பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும்போது அதனால் உண்டாகும் நோய் எதிர்ப்பொருள் (Immunity power) குழந்தைகளுக்கும் மிக எளிதாக கிடைக்கும் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

முன்னதாக கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில் கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்களுக்குச் செலுத்துவது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் எந்த பாதகமான முடிவுகளும் வெளியாகவில்லை. எனவே கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என விளக்கம் அளித்து இருந்தது.

இந்நிலையில் பாலூட்டும் தயார்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் புது அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் கொரோனா தடுப்பூசி போடுவதன் காரணமாக தாய்க்கு உருவாகும் நோய் எதிர்ப்பொருள் குழந்தைகளுக்கும் சென்று பயனுடையதாக மாறும் எனத் தெரிவித்து இருக்கிறது.

மேலும் தாய்மார்களின் உடலில் உண்டாகும் நோய் எதிர்பொருள் கோவிட்-19 நோயில் இருந்து பாதுகாக்கக்கூடிய நோய் எதிர்பொருளாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமும் இல்லை. ஒருவர் தடுப்பூசி போடும்போது அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

இந்த நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பொருளை சமநிலைப்படுத்தும். கூடவே செல் மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியாக வேலை செய்யும். அதோடு கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்போது ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ்க்கு எதிராக எதிர்வினையை உண்டாக்கும். இந்த விளைவுகள் கொரோனா நேரத்தில் மிகவும் அவசியமான ஒன்று. எனவே பாலூட்டும் தயார்மார்கள் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தியின் விளைவுகளுக்காக தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியம் என ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்துமா, தூசி அலர்ஜி, மகரந்த தூள் அலர்ஜி உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இணை நோய் உள்ளவர்களும் நிலையாக இருந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இதர பிரச்சனை உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நலம்.

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என ஐசிஎம்ஆர் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் அதிகமாகப் பரவும் தன்மையைக் கொண்டு இருக்கின்றன. எனவே இதுபோன்ற சமயங்களில் பொதுவான கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஐசிஎம்ஆர் கேட்டுக் கொண்டுள்ளது.