கொரோனா பாதிப்புக்கு பலியான மற்றொரு திரையுலக பிரமுகர்!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

தமிழகத்தை கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அப்பாவி பொது மக்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் பாதித்து வருகிறது என்பதும், கே.வி.ஆனந்த், தாமிரா, நிதிஷ் வீரா உள்பட ஒரு சிலரின் உயிரையும் பலி வாங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு இன்று மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்கே சுரேஷ் நடித்த ’பில்லா பாண்டி’ என்ற படத்தில் எழுத்தாளர் எம்.எம்.எஸ் மூர்த்தி என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் எழுத்தாளர் எம்.எம்.எஸ் மூர்த்தி அவர்களின் மறைவுக்கு ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.