மீண்டும் ஒருமுறை மன்னிப்பு: 'உண்மையா இது' என நெட்டிசன்கள் கேள்வி!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, முதல் நாள் முதல் சக போட்டியாளர்களிடம் ஆவேசமாக பேசுவது, அதன்பின் கமல்ஹாசன் எபிசோடின்போது மன்னிப்பு கேட்பது என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த 90 நாட்களில் இதுவரை பாலாஜி எத்தனை முறை மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்பதை கணக்கிடவே முடியாது.

கமல்ஹாசனின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு அதன்படி ஒரு சில நாட்கள் நடக்கும் பாலாஜி, ‘மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல்’ இருப்பதாகவே நெட்டிசன்களின் விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஆரியுடன் பயங்கரமாக மோதிய பாலாஜியை நேற்று கமல்ஹாசன் வறுத்து எடுத்த நிலையில் இன்று மீண்டும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இன்றைய முதல் புரமோவில் பாலாஜி, கன்பெக்சன் அறையில் உட்கார்ந்து பேசியபோது, ‘கோபம் என்பது என்னுடைய இயற்கை. கோபத்தை மட்டுமே நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அது தவறு, இது தவறு என்று சொல்வதற்கு என்னுடைய வாழ்க்கையில் யாருமே இல்லை. மக்களும் சரி, மக்களுடைய பிரதிநிதியான கமல் அவர்களும் சுட்டிக்காட்டும்போது தான், நான் செய்தது உச்சகட்டம் மிஸ்டேக் என்று எனக்கு புரிகிறது. அதை சரி செய்யவும் எனக்கு தெரியும்.

நான் எவ்வளவுதான் கீழே விழுந்தாலும் மீண்டும் எழுவது தான் என்னுடைய இயற்கை. எவ்வளவு கீழே விழுந்தாலும் மறுபடியும் நான் உச்சத்திற்கு வருவேன் என பாலாஜி கூறினார். இதனை அடுத்து கமலஹாசன் அவரை பாராட்டுவதுடன் இன்றைய புரமோ வீடியோ முடிவடைகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் இந்த தருணத்திலாவது பாலாஜி தன்னுடைய தவறை உண்மையிலேயே உணர்ந்து மன்னிப்பு கேட்டாரா? அல்லது மீதமுள்ள இரண்டு வாரங்களில் மீண்டும் முருங்கை மரம் ஏறுவாரா? என்று சந்தேகப் பார்வையுடன் தான் பாலாஜியின் மன்னிப்பை நெட்டிசன்கள் பார்த்து வருகின்றனர். அவருடைய மன்னிப்பு உண்மையானதுதானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.