அருள்நிதியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,June 18 2018]

நல்ல கதைகளை தேர்வு செய்து வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. பலமான அரசியல் பின்னணி இருந்தாலும் அரசியல் கதைகளை தேர்வு செய்யாமல் த்ரில் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அருள்நிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குனர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பரத் நீலகண்டன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் அர்ஜூன் நடித்த 'நிபுணன்' என்ற படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் என்பவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து எஸ்பி சினிமாஸ் சங்கர் கூறியபோது, அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதை கேட்கும் போது அவர் காட்டிய பேரார்வமும், அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. நல்ல தரமான கமர்சியல் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு அருள்நிதியின் கதை தேர்வு பிடித்து போய், அவரின் புகழ் அதிகரித்து, அவர்களின் ஃபேவரைட்டாக மாறி இருக்கிறார். நல்ல ஒரு பெருமைமிகு வெற்றிப் படத்தை கொடுக்கும் முனைப்பில், ஒரு தயாரிப்பாளராக மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறினார்