என்னையும் கைது செய்யுங்கள். சிம்புவின் ஆவேச பேட்டி

  • IndiaGlitz, [Sunday,January 29 2017]

சென்னை மெரீனாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றாலும் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் மீனவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சற்று முன் நடிகர் சிம்பு திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:

மாணவர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றபோது அவர்களுக்கு உதவுவதற்காக வந்த மீனவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்த அனைவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். கைதானவர்களை விடுதலை செய்யவில்லை என்றால் அவர்களுக்காக அறவழியில் போராடுவேன்.

தமிழர்கள் என்ற உணர்வுடன் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களிடம் ஜல்லிக்கட்டு சட்டத்தை பற்றி முழுமையாக விளக்கியிருந்தால் வன்முறை நடைபெற்றிருக்காது. மாணவர்கள் கலைந்து செல்வதற்கு காவல்துறையினர் போதிய அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்திருந்தால் வன்முறை நடந்திருக்காது.

மேலும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாமல் போனது வேதனை அளிக்கின்றது. வெற்றியை கொண்டாட இந்த அரசு எங்களுக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலரை தேச விரோதிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வது என்றால் என்னையும் கைது செய்யுங்கள். நானும் தான் போராடினேன்' என்று கூறிய சிம்பு, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.