அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைத்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்.. திவால் என அறிவிக்கப்படுவாரா?

  • IndiaGlitz, [Monday,June 17 2024]

அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைத்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர் தன்னிடம் சொத்து இல்லை என்றால் திவால் ஆனவர் என்று அறிவிக்கலாம் என்றும் நீதிபதி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி, அமலாபால் நடித்த ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு சேர வேண்டிய சம்பளம் 35 ரூபாய் லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் முருகன் குமரன் என்பவர் செட்டில் செய்யவில்லை என நடிகர் அரவிந்த்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அரவிந்த்சாமிக்கு சேர வேண்டிய 35 லட்சம் மற்றும் 18 சதவீத வட்டியை தயாரிப்பாளர் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை தயாரிப்பாளர் செயல்படுத்தவில்லை என்ற நிலையில் அரவிந்த்சாமி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது தயாரிப்பாளர் தன்னுடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்து விட்டதாகவும், அதில் தனக்கு சொந்தமாக எந்த சொத்துக்களும் இல்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சொத்துக்கள் இல்லை என்றால் திவால் ஆனவர் என அறிவித்து கைது நடவடிக்கையில் இருந்து தவிர்க்கலாம் என்று தெரிவித்த நீதிபதி சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால தாமதம் செய்வதாக கூறி தயாரிப்பாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தார். மேலும் இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஜூலை 8ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.