கொரோனா நேரத்தில் மனித இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த விரும்பும் அரபு நாடு!!! என்னவா இருக்கும்???

  • IndiaGlitz, [Friday,June 19 2020]

 

ஈரான் நாட்டில் தற்போது அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மிகவும் தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மட்டுமே குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஆண்களுக்கு செய்யப்படும் வாஸெக்டோமி அறுவை சிகிச்சை செய்வதையும் அரசு முற்றிலும் நிறுத்தி வைத்திருக்கிறது. இதைத்தவிர நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கருத்தடை மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் மருத்துவ மனைகளில் கருத்தடைக்கான அறுவைச் சிகிச்சைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈரான் எதற்கு இப்படி திடீர் விபரீதத்தில் ஈடுபட்டு இருக்கிறது என்ற சந்தேகம் எழலாம். ஆனால் ஈரானில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு கவலைத் தெரிவித்து இருக்கிறது. குறைவான பிறப்பு விகிதம் இருக்கும்போது அந்நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதே நிலைமை நீடித்தால் அடுத்த 30 வருடங்களில் ஈரான் நாட்டில் வெறுமனே வயதானவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் உலகிலே வயதான மக்கள் தொகையைக் கொண்ட நாடாக ஈரான் மாறிவிடும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வருத்தம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலைமையை சமாளிக்க மனித இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். அதனால்தான் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்கு அரசு மறுப்பு தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தாண்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1 சதவீதமாக குறைந்து இருப்பதும் காரணமாகக் கூறப்படுகின்றன. சென்ற வருடம் ஈரான் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.4 விழுக்காடாக பதிவாகி இருந்தது. ஈராக்கில் 2.3% ஆகவும் சௌதி அரேபியாவில் 1.8% ஆகவும் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்த அரபு நாடுகளிலுமே தற்போது திருணமங்கள் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. திருமணங்கள் நடந்தாலும் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் தற்போது 40% திருமணங்கள் குறைந்து இருப்பதாக அந்நாட்டின் அரசு ஊடகம் இர்னா குறிப்பிட்டு இருக்கிறது. அந்நாட்டில் 1979 க்கு பிறகுதான் மக்கள் தொகை வளர்ச்சியே ஏற்பட்டது. பின்னர் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மோசமாகி இருப்பதாகவும் நிலைமையை சரிகட்ட மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்கப் படுத்த வேண்டும் என அந்நாட்டின் சுகாரதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. தற்போது இருக்கும் மக்கள் தொகையை 8 கோடியில் இருந்து 15 கோடியாக அதிகரிக்க வேண்டும் என ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்து உள்ளார்.