உதயநிதியுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: என்ன பேசினார்கள் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 15 2022]

தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் உதயநிதி மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஐசரி கணேசன் தாயார் புஷ்பா அவர்கள் நேற்று காலமானார். இதனையடுத்து அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள புஷ்பாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஐசரி கணேஷின் வீட்டுக்கு சென்று அவருடைய தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்தார். இருவரும் அஞ்சலி செலுத்தியபின் ஒருவருடன் ஒருவர் சந்தித்து பேசிக் கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலினிடம் அண்ணாமலை ’அப்பா எப்படி இருக்கிறார்? நலமாக இருக்கிறாரா? என்று கேட்க அதற்கு உதயநிதி ஸ்டாலின் ’நலமாக இருக்கிறார் என்றும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்’ என்றும் கூறினார். இதனை அடுத்து அண்ணாமலை, ‘அப்பா விரைவில் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.

இதனை அடுத்து அண்ணாமலையிடம் உதயநிதி, ‘நீங்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி விட்டீர்களா? என கேட்க அதற்கு அண்ணாமலை ‘ஆம்’ என்று பதிலளித்தார். இந்த நிலையில் உதயநிதி, அண்ணாமலை சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.