இரண்டாவது முறை பார்த்தால் தான் 'கோப்ரா' கதை புரியும்: அஜய் ஞானமுத்து

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து, ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளார். அப்போது ஒரு ரசிகர் ‘கோப்ரா’ படத்தின் கதை தனக்கு புரியவில்லை என்றும் ’இமைக்காநொடிகள்’ படத்தை இயக்கிய இயக்குனரா இந்தப் படத்தை இயக்கியது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த இயக்குனர் அஜய்ஞானமுத்து குழப்பமான கதையம்சம் கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் என்பதால் அப்படிப்பட்ட கதையை படமாக எடுத்தேன் என்றும் ஆனால் இரண்டாவது முறை நீங்கள் ‘கோப்ரா’ படத்தை பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த படத்தின் கதை புரியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னொரு ரசிகர், ‘‘கோப்ரா’ படத்தை பார்த்து தனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது என்று தெரிவித்த நிலையில் உங்களுடைய ஏமாற்றத்திற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் கண்டிப்பாக அடுத்த படத்தில் உங்களை நான் திருப்தி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.