விஷாலை அடுத்து தனுஷுக்கும் தடை.. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Monday,July 29 2024]

கடந்த சில நாட்களுக்கு முன்னால் விஷாலை வைத்து திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்து பேச வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது தனுஷூக்கும் அதே போன்ற கட்டுப்பாடு விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று தயாரிப்பாளர் சங்கம் கூட்டம் நடந்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

29.07.2024 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

1. முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8-வாரங்களுக்கு பிறகே OTT. தளங்களில் வெளியிட வேண்டும். என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2. இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர். நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால், ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.

நடிகர் திரு.தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் திரு.தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள
படுகிறார்கள்.

3. இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி இருக்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படவுள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால், வருகிற 16.08.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது கூட்டத்தில் ஏகமனதாக திமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

4. தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆகையால், தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

5. நடிகர்-தடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால், அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து, தமிழ் திரைத்துறையை மறு சீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால், வருகின்ற 01.11.2024 முதல் தமிழ் அனைத்துவிதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளடக்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.