ரஜினி, கமல், விஜய்யை அடுத்து அஜித்.. மக்கள் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்..!

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர்களின் படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி ,அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’, உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’, தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’, ஆகிய படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டினார் என்பதும் இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்திலும் வில்லனாக நடித்து அசத்திய நிலையில் அடுத்த கட்டமாக அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அவர் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்டமாக எஸ்ஜே சூர்யாவை வில்லனாக நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில் ’குட் பேட் அக்லி’ படத்திலும் அவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’குட் பேட் அக்லி’ படத்தில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் சுனில் வில்லனாக ஒரு கேரக்டரில் நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி அல்லது எஸ்ஜே சூர்யா இன்னொரு வில்லனாக நடிப்பார்கள் என்ற தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது ’குட் பேட் அக்லி’படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 8-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் இடைவெளியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.