மீராமிதுனின் ஆண் நண்பரும் கைது: விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல்!

  • IndiaGlitz, [Sunday,August 15 2021]

பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று கேரளாவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி இருந்ததாக செய்திகள் அறிந்து காவல்துறையினர் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

காவல்துறையினர் கைது செய்யும்போது மீராமிதுன் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அப்போது அவரது ஆண் நண்பரும் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீராமிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகிய இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த காவல்துறையினர் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் மீராமிதுனை விசாரணை செய்தனர்.

ஆனால் விசாரணைக்கு மீராமிதுன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே எந்த கேள்விக்கும் பதில் சொல்வேன் என்றும் வாக்குமூலம் தர முடியாது என்றும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விசாரணைக்கு பின்னர் மீராமிதுனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீரா மிதுனின் ஆண் நண்பர் அபிஷேக் ஷியாம் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மீராமிதுனை தொடர்ந்து அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.