அதிமுகவின் அசத்தும் தேர்தல் அறிக்கை… ஒரே ஷாட்டில் மக்களை கவர்ந்த தமிழக முதல்வர்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிவித்தார். இந்த அறிக்கையில் அம்மா இல்லம், குள விளக்கு திட்டம், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், விவசாயிகளுக்கு உளவு மானியம் என அதிரடியான வாக்குறுதிகள் இடம்பிடித்து இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் இருந்து விளக்கம் அளித்து இருந்தார்.

மேலும் இந்த அறிக்கை ஏழை, எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்றும் மக்களின் அடிப்படை வசதிகளையும் அவர்கள் வாழ்வாதாரம் உயருவதற்கு ஏற்ற விதமாக அமைந்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் ஏழை, எளியோர், விவசாய பெருமக்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் அதிமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கை கவர்ந்துள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்த அறிக்கையில் அனைவருக்கும் வீடு-அம்மா இல்லம் திட்டம். கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் எனவும் நகர்ப்புறங்களில் வீடு இல்லாத மக்களுக்கு அரசே நிலம் வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும்.

குளவிளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் பெண்கள் இல்லாத வீடுகளில் ஆண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பொங்கலுக்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு இனி ஆண்டுதோறும் தவறாமல் வழங்கப்படும் என்றும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், அனைத்துக் குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார். அம்மா சோலார் சமையல் அடுப்பு மற்றும் அம்மா வாசிங் மெஷின் இலவசமாக வழங்கப்படும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 7,500 ரூபாய் உழவு மானியம் வழங்கப்படும். மாணாக்கர் நலன் காக்க மாணவர்களின் கல்விக்கடன் ரத்துச் செய்யப்படும்.

நாளொன்றுக்கு வழங்கப்படும் 2ஜிபி டேட்டா இனி ஆண்டு முழுவதும் இலவசமாக வழங்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உறுதியாக வழங்கப்படும் என அறிவித்தார். ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் தொகை இனி 2,000 ஆக உயர்த்தப்படும். இலவச அரசு கேபிள் டிவி, சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஏழைத் தம்பதிகளுக்கு பட்டாடை, வெள்ளிக்கொலுசு, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற சீர்வரிசை வழங்கப்படும்.

புரட்சித் தலைவரின் சத்துணவுத் திட்டம் செயல்பாடு, மாணவர்களுக்கு தினமும் 200 மி. பால் அல்லது பால் பவுடர் வழங்கும் திட்டம், அரசாங்கமே வழங்கும் வட்டியில்லா கடன் உதவி போன்ற அனைத்துத் திட்டங்களும் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்படுதாக முதல்வர் விளக்கம் அளித்து இருந்தார். மேலும் இந்த வாக்குறுதியில் எந்த பாகுபாடும் இல்லாமல் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.