கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதி..!

கோவையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதனால் அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அங்கு இருக்கும் போது உடல் நலம் சரியில்லாமல் போன காரணத்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சளி மற்றும் இரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அதே போல் சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையம் வந்த கேரள இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறிப்பட்டு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பங்களாதேஷிலிருந்து கோவை மேட்டுப்பாளையத்திற்கு வேலைக்கு வந்திருக்கும் இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தெரிந்து கோவை பொது மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.