ரஜினி வசனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்த அஜித்-விஜய் நாயகி

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலை தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்த ’தேவா’ அஜித் நடித்த ’வான்மதி’ ஆகிய படங்கள் உள்பட பல படங்களில் நடித்த நடிகை சுவாதி தற்போது வீடியோ ஒன்றின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். அவர் இது குறித்து அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

பொறுமையாக இருப்போம். இந்த ஊரடங்கு உத்தரவுக்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்போம். ரஜினி சார் அவர்கள் கூறிய ஒரு வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. கொரோனாவை ஒழிக்க ஒரே ஒரு வழி தான் உள்ளது. தனிப்பட்ட முறையில் சுத்தமாக இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சானிடைசர் வைத்து கைகளை கழுவுவது. இதை ஒழுங்காகச் செய்தால் நாம் கொரோனாவை முழுமையாக அழிக்க முடியும்.

எனவே உங்களிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வது என்னவெனில், ‘வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள், முக்கியமாக முதியவர்களை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ளுங்கள், குழந்தைகளுடன் அன்பாக இருங்கள்’ என்று நடிகை சுவாதி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.