ரூ.10 கோடி இழப்பீடு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை வழக்கு!

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது தமிழ் நடிகை ஒருவர் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நடிகை ஒருவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்தார் என்பது தெரிந்ததே. இந்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் அதன் பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதன்படி அதே நடிகை தற்போது ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு பெறுவதற்கான உரிமை உண்டு என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கை நடிகை தொடுத்து உள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கின் முடிவு என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.