நடிகை சமந்தாவுக்கு என்ன சிகிச்சை? அவரே அளித்த நீண்ட விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,October 29 2022]

நடிகை சமந்தாவிற்கு ஒரு முக்கிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

நடிகை சமந்தா சூர்யாவின் ’அஞ்சான்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு சரும பிரச்சனை இருந்ததாகவும் அதனால் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் அந்த பிரச்சனை மீண்டும் வந்திருப்பதாகவும் அதனால் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனக்கு என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் நடித்த ’யசோதா’ திரைப்படத்திற்கு அமோக ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தற்போது மயோசிட்டிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் என்ற பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த பிரச்சனையிலிருந்து நான் முழுவதும் மீண்ட பிறகு இதுகுறித்து பதிவு செய்யலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட தற்போது சிகிச்சைக்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால் இப்போதே நான் இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நான் தற்போது மெதுவாக குணமாகி கொண்டிருக்கிறேன். இந்த பாதிப்பை ஏற்றுக்கொண்டு, சிகிச்சையை போராடி பெற்றுக் கொள்வதும் அவசியமான ஒன்றாக கருதுகிறேன். நான் விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என்று மருத்துவர்கள் எனக்கு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு என்பது போல் எனக்கும் அதேபோல் உண்டு என்பதை நான் உணர்கிறேன்.

உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் என்னால் ஒவ்வொரு நாளையும் கடினமாக கழிக்க முடிகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் நான் குணமடையும் நாளை நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவை அடுத்து நடிகை சமந்தாவுக்கு என்ன பிரச்சனை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது உடல் நலம் குறித்து அனைத்து வதந்திகளுக்கும் முடிவு கட்டப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.