தோல்வி முகத்தில் நடிகை ரோஜா.. நடிகர் பவன் கல்யாண் கட்சியின் நிலை என்ன?

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, நகரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலில் நடந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 175 தொகுதிகள் ஆந்திராவில் உள்ள நிலையில் அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 132 இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான நடிகை ரோஜா, நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட நிலையில் அவர் தெலுங்கு தேச கட்சி வேட்பாளரை விட சுமார் 22,000 வாக்கு குறைவாக பெற்று பின்தங்கியுள்ளார்.

நகரி தொகுதியில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் பானு பிரகாஷ் என்பவர் 45622 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் நடிகை ரோஜா 23523 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதால் அவரது தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல்முறையாக கேரளாவில் பாஜக கால் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.