பேருந்து படியில் தொங்கிய மாணவர்களை தாக்கிய நடிகை.. தட்டித்தூக்கிய காவல்துறை..!

  • IndiaGlitz, [Saturday,November 04 2023]

பேருந்து படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை துணை நடிகை ஒருவர் தாக்கிய நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு சென்ற நிலையில் திடீரென துணை நடிகையும், வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் என்பவர் அந்த பேருந்தை நிறுத்தி மாணவர்களை சரமாரியாக தாக்கினார். அதுமட்டுமின்றி அவர் கண்டக்டர் மற்றும் டிரைவரையும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ரஞ்சனா நாச்சியார் செய்தது தவறு என சமூக வலைதளங்களில் பலர் பதிவு செய்தனர். ஒரு சிலர் அவர் செய்த முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் அவர் மாணவர்களின் உயிரை காப்பாற்றவே அவ்வாறு செய்தார் என்றும் கூறி வந்தனர்

இந்த நிலையில் இது குறித்த வழக்கில் ரஞ்சனா நாச்சியாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்தது போலீசாருடன் வரமாட்டேன் என்று அடம்பிடித்து வாக்குவாதம் செய்ததாகவும் தனது காரில் தான் வருவேன் என்று கூறியதாகவும் அதன் பிறகு அவரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.