ரஜினி, கமல் நடிகையின் ரூ.25 கோடி சொத்துக்கள் மோசடி.. காவல்துறை ஆணையரிடம் புகார்..!

  • IndiaGlitz, [Tuesday,September 12 2023]

நடிகை கவுதமி தனது 25 கோடி ரூபாய் சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை கவுதமி. இவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் ’ஸ்ரீபெரும்புதூர் உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் தனக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த சொத்துக்களை விற்பதற்கு பவர் ஏஜெண்டாக அழகப்பன் என்பவரை நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது கையெழுத்துக்களை வைத்து போலியான ஆவணங்களை உருவாக்கி சொத்துக்களை அபகரித்து உள்ளதாகவும் நான்கு விதமான மோசடிகளை தனது வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் மற்றும் அதிகார பலத்தால் தன்னை மிரட்டுவதாகவும் தன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் இதனால் தனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதை புகாரில் தெரிவித்துள்ளார்.

எனவே தனது 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த அழகப்பனிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.