நடிகர் விவேக்கிற்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு!

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் நடிகர் விவேக். அதன்பின் கே.பாலச்சந்தர் உள்பட பல பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்

இந்த நிலையில் கே பாலச்சந்தரை தனது குருநாதராக எண்ணி கடந்த பல வருடங்களாக திரை உலகில் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கும் நடிகர் விவேக்கிற்கு, தற்போது பாலச்சந்தரின் விலைமதிப்பில்லாத பொருள் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. ஆம், கே.பாலசந்தர் திரைக்கதை எழுத பயன்படுத்தும் பேனாவை அவரது மகள் புஷ்பா கந்தசாமி அவர்கள் விவேக்கிற்கு பரிசாக அளித்துள்ளார். விலைமதிப்பில்லா இந்த பரிசு குறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:

யாருடைய எழுத்துக்களைப் படித்தும், படமாகப் பார்த்தும், பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.