அரசியல் என்பது தொழில் அல்ல, புனிதமான பணி.. கட்சி பெயரை அறிவித்தார் விஜய்..!

  • IndiaGlitz, [Friday,February 02 2024]

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி விரைவில் தொடங்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது கட்சி ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர் நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள்.விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே.

நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ( பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். எண்ணித் துணிக கருமம் என்பது வள்ளுவன் வாக்கு.

அதன்படியே, தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.

என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்.

நன்றி.

இப்படிக்குஉங்கள் விஜய்

More News

32 வயதில் காலமானார் நடிகை பூனம் பாண்டே.. என்ன நடந்தது?

பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 32.  

'சிம்பு 48' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்..!

சிம்புவின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 48வது படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் இன்று வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசனின்

'சிறகடிக்க ஆசை': மலேசிய மாமாவை அடுத்து அடுத்த இடி.. முத்து கண்டுபிடித்த உண்மையால் ரோகிணி அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறக்கடிக்க ஆசை' என்ற சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அண்ணாமலை தனது மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களுடன்

ஹாலிவுட் வாய்ப்பை பெற்ற 'பொன்னியின் செல்வன்' நடிகை.. அதுவும் யுனிவர்சல் பிக்சர்ஸ் படத்தில்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை, ஹாலிவுட்டில் வாய்ப்பு பெற்றுள்ள நிலையில் அவர் நடித்த ஹாலிவுட் படம்

அரசியல் கட்சிக்கு விஜய் அழைப்பு விடுக்கும் நபர்கள்.. ஆரம்பமே ஆச்சரியம்..!

 பொதுவாக ஒரு பிரபல நடிகர் கட்சி ஆரம்பித்தால் உடனே அந்த கட்சியில் சேர்வதற்கு பிற கட்சியில் உள்ள பிரபலங்கள் வருவார்கள். புதிய கட்சியில் இணைந்தால் நமக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்