பசங்க-2 படம் எப்படி? நடிகர் சிவகுமார் விமர்சனம்

  • IndiaGlitz, [Monday,December 28 2015]

சூர்யா, அமலாபால் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'பசங்க-2 திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் அனைத்து தரப்பினர்களும் காண வேண்டிய ஒரு படம் என பெரும்பாலான விமர்சனங்கள் கூறியுள்ள நிலையில் சூர்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான சிவகுமார் இந்த படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார். சிவகுமாரின் விமர்சனம் இதோ:

நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்.

உளவியல், உடலியல், பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விசயங்கள், தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள், கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள், இன்றைய காலகட்டத்தில் கணவரும், மனைவியும் எவ்வாறு வாழக்கை வாழ்கிறார்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது, கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமுகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு புட்டு வைக்கின்றனர்.

கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்கள் எவ்வாறு எல்லாம் புரிந்து கொள்ளப்படாமல் பெற்றோரிடமும், சமூகத்தினாலும், ஆசிரியர்களாலும் வதைக்கபடுகின்றனர், சக மாணவர்களால் எவ்வாறு மோசமாக நடத்தப்படுகிறார்கள், பள்ளிகள் அவர்களை எவ்வாறு நடத்துகின்றன, எவ்வாறு சரியாக நடத்த வேண்டும் உட்பட மிக அருமையாக சொல்லி உள்ளனர்.

பள்ளி முதல்வர்கள் மார்க் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து எவ்வாறு எல்லாம் சொற்களால் மாணவர்களை கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களது பெற்றோர்களை எவ்வாறு அசிங்கபடுத்துகின்றனர். 70 கிலோ உள்ள தந்தை, தாய் 15 கிலோ உள்ள ஒரு குழந்தையை அடிப்பது எவ்வளவு அராஜகமான செயல் என்று பெற்றோர் பிள்ளையை அடிக்கும் பகுதியை அழகாக எடுத்து கூறி அதன் வீரியத்தை தெளிவாக சொல்லி உள்ளனர்.

அனைத்து குழந்தைகளுக்கும் போட்டி போட ஆசை உள்ளதையும், வெற்றி பெறும் பிள்ளையை மட்டுமே அனைத்து போட்டிகளுக்கும் அழைத்து சென்றால் மற்ற பிள்ளைகளுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை அழகாக எடுத்து சொல்லி உள்ளதுடன், மேடையில் ஏறும் அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான் என்பதும், மேடை ஏறுவது மட்டும்தான் நமது வேலை, வெற்றி பெறுவது பற்றி கவலை இல்லை என்பது சூப்பர்.

ஆனால் இன்றைய நிலையில் இப்படி பள்ளிகளை பார்ப்பது மிக அரிது. கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இன்றைய மருத்துவர்களால் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் படும் வேதனை என்ன என்பதனை மிக தெளிவாக காட்டி உள்ளனர்.

சமுகத்தில் இதுபோன்ற கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகள் அனைவரையும் பெருவாரியான ஆசிரியர்களும், மற்றவர்களும் ஒதுக்கியே வைக்கின்றனர். அவர்களுக்குள்ளும் பல்வேறு திறமைகள் உள்ளது, அதனை எவ்வாறு சரி செய்வது என்பது உட்பட பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வினையும் இப்படம் தெளிவாக விளக்கி உள்ளதால் இதனை அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளிலும் வெளியிட்டால் கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது உண்மை.

குழந்தை பிறக்க இருக்கும் கர்ப்பிணி பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவரது கணவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், 3 மாதம் முதல் குழந்தை எவ்வாறெல்லாம் தாயின் வயிற்றில் கேட்டு வளர்கிறது, படத்தின் ஆரம்பத்தில் எப்படி குழந்தை பெற்றோர் தொலைக்காட்சி பார்த்து கொண்டே இருப்பதால் எவ்வளவு தவறான விசயங்கள் பிள்ளைகளுக்கு வயிற்றில் இருக்கும்போதே போய் சேர்கிறது, ஜாதகம் பார்த்து குழந்தையை மருத்துவர் உதவியுடன் அறுத்து எடுப்பது எவ்வளவு தவறான நடைமுறை சமுகத்தில் பரவி உள்ளது, பெரிய பதவியில் உள்ள ஒருவர் எவ்வாறு தன்னை அறியாமல் தனக்கு பிடித்தமான பொருளை திருடுகிறார் என்பது உட்படவும், வீட்டில் குழந்தைகள் பெற்றோர் பேசுவதை கேட்டு எப்படி எல்லாம் வார்த்தைகள் பேசுகிறார்கள், கணவர் போன் பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைகள் எவ்வாறு எல்லாம் பாதிக்க படுகிறார்கள், குழந்தைகளை பார்த்து கொள்வதில் தாய் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும், அவரது கணவருக்கும் அதில் பொறுப்பு இருக்கிறது என்பதையும், படத்தின் நிறைவாக எழுத்து ஓடும்போது யாரெல்லாம் கற்றலில் அதீத திறமை உடையவர்களாக இருந்து ஜெயித்து உள்ளனர் என்பது உட்பட அனைத்து விசயங்களும் சூப்பர்.

பெற்றோர் அவர்கள் என்னவாக நினைத்து இருந்தனரோ அதனை தங்கள் குழந்தைகளிடம் திணிப்பது தவறு என்பதை அழகாக எடுத்து சொல்வதுடன், மதிப்பெண் மட்டுமே அவர்களது வாழ்க்கை இல்லை அவர்களது திறமை என்ன கண்டு அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதை நன்றாக எடுத்து கூறி உள்ளனர்.

படத்தின் ஆரம்பத்தில் முழு ஓட்டத்தையும் நிறைவு செய்யும் மாணவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதையும், அதன்பின் அவர் வாழ்கையில் எவ்வாறு நல்ல சமூக அக்கறை உள்ளவராக மாறுகிறார் என்பதையும் மிக சிறப்பாக கூறி உள்ளனர்.

கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்களை இந்த சமுதாயமும், ஆசிரியர்களும்,பெற்றோர்களும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பான படம் இது. அனைவரும் காணவேண்டிய படம் இது.

இவ்வாறு நடிகர் சிவகுமார் பசங்க-2 படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

More News

ரஜினி, விஜய்யை முந்துகிறார் அதர்வா

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு ஒரே ஒரு வெற்றிதான் தேவை. அந்த ஒரு வெற்றியை பெற்றுவிட்டால் ...

வெள்ள பாதிப்பு பகுதியில் சமந்தா அம்மா நிவாரண உதவி

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளித்த பொதுமக்களுக்கு கோலிவுட் திரையுலகினர் லட்சக்கணக்கில் நிதியுதவி...

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் அருண்விஜய்?

நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற இயக்குனர் அல்போன்ஸ்புத்திரன் சமீபத்தில்...

சிம்பு மீதான பீப் பாடல் வழக்கு திடீர் வாபஸ்

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

4 வருடத்திற்கு பின்னர் ரீ-எண்ட்ரி ஆகும் தனுஷ் பட இயக்குனர்

தனுஷ் நடித்த 'திருடா திருடி', 'சீடன்' உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் சுப்பிரமணிய சிவா...