பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்த பிரகாஷ்ராஜ்

  • IndiaGlitz, [Tuesday,September 08 2015]

இந்தியாவில் பல பின்தங்கிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் இருப்பதால் அவற்றை பிரபலங்கள் தத்தெடுத்து முன்னேற்ற உதவவேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்படி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பல பின்தங்கிய பகுதிகளை தத்தெடுத்து அந்த பகுதியின் முன்னேற்றத்திற்காக உதவி செய்து வருகின்றனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 12 கிராமங்களையும், அமீர்கான் 5 கிராமங்களையும், ப்ரியங்கா சோப்ரா இரண்டு கிராமங்களையும், சாஹித் மூன்று கிராமங்களையும் தத்தெடுத்து அந்தந்த பகுதியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். அதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவும், மற்றொரு பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவும் ஆந்திராவில் உள்ள ஒருசில கிராமங்களை தத்தெடுத்து உதவி செய்து வருகின்றனர்.

இந்த வகையில் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் சிறப்பாக நடித்து வரும் பிரகாஷ்ராஜும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹ்பூப்நகர் மாவட்டத்தில் உள்ள காகுனூர் என்ற பகுதியில் உள்ள கொண்டரெட்டிபலே என்ற கிராமத்தை பிரகாஷ்ராஜ் தத்தெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. பின்தங்கிய கிராமம் ஒன்றை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பிரகாஷ்ராஜ் எடுத்த இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.