அனிருத்தின் முதல் பேய்ப்படத்தில் இணையும் மிஷ்கின் நாயகன்

  • IndiaGlitz, [Wednesday,March 16 2016]
தனுஷ் நடித்த 'தங்கமகன்' திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் ஹீரோவாக நடிக்கும் 'ரம்' திரைப்படம் சமீபத்தில் தொடங்கப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் நாயகிகளாக 'சூது கவ்வும்' படத்தின் நாயகி சஞ்சிதா ஷெட்டி மற்றும் 'இன்று நேற்று நாளை' நாயகி மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல நடிகர் நரேன் இணைந்துள்ளார். மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தில் அறிமுகமான நரேன் அதன் பின்னர் அஞ்சாதே, முகமூடி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் நரேன் நடிக்கவுள்ள கேரக்டர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சாய்பரத் என்பவர் இயக்குகிறார். இந்த படம் தமிழில் உருவாகி வரும் மற்றொரு பேய்ப்படம் என்பதும் ஒரு திகில் படத்திற்கு முதன்முதலாக அனிருத் இசையமைக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆல் என் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.