சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்ட வேண்டும்: பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Friday,October 12 2018]

பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் விக்ரம் நடித்த 'சாமுராய்', 'அருள்' போன்ற தமிழ்ப்படங்கள் உள்பட பல மலையாள திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் கொல்லம் துளசி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டிப்போட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும்' என்று ஆவேசமாக கூறினார்

நடிகர் கொல்லம் துளசியின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக பேசியதற்கும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்கும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் கேரள அரசை வலியுறுத்தி வருகின்றன.