'பொதுநலன் கருதி' இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு கருணாகரன் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,February 11 2019]

சமீபத்தில் வெளியான 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் சீயோன், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கருணாகரன், தனக்கும் தயாரிப்பாளருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக புகார் கூறியிருந்தார். இந்த புகாருக்கு தற்போது நடிகர் கருணாகரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:


'பொதுநலன் கருதி' திரைப்பட இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணைத் தயாரிப்பாளர் என்னைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை.

படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்து பிப்ரவரி 4 ஆம் தேதியன்று சொல்லி என்னை அழைத்ததே பிப்ரவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் ஒன்பது மணிக்கு தான். கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒப்புக்கொண் பணிகளை ஒதுக்கி வைக்க முடியவில்லை.

இவற்றையெல்லாம தெளிவாக இயக்குநரிடமும் இணை தயாரிப்பாளரிடமும் கூறியிருந்தேன். படப்பிடிப்பு பணிகள் முடிந்து நான் சென்னைக்கு வந்ததே பிப்ரவரி 8 ஆம் தேதிதான். நான் ஏதோ வேண்டுமென்றே ஆடியோ ரிலீஸுக்கு வரவில்லை என்று அவர்கள் என் மீது குறை சொல்கிறார்கள். அது உண்மையில்லை.

செலிபிரிட்டி ஷோ முடிந்து அவர்கள் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் கருணாகரனால் அனுப்பப்பட்ட மர்ம நபர்கள், நீ எப்படி கருணாகரனைக் குறை சொல்லலாம் என தாக்க முயற்சித்தனர் என்று படத்தின் டீசர் வெளியீட்டின் அன்று மிரட்டியதாக புகார் கொடுத்திருக்கிரார்கள். இவை குறித்து நான் தெரிவிக்க விரும்புவது பின்வருமாறு

*எனக்கும் எந்தக் கந்துவட்டிக் காரருக்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை.

*எனது தந்தை திரு. காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றிய விருது பெற்றவர். இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற வழிகளில் நான் வளர்க்கப்படவில்லை.

*தான் நடித்த படம் நன்றாக ஓட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நடிகரும் விரும்புவர். உயிரை பணயம் வைத்து நான் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளேன். கந்துவட்டிக்காரர்களுட்ன நான் சேர்ந்து படத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை .

கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களும் உதவி செய்திருக்கும் என்னைக் கந்துவட்டிக்கும்பலுடன் தொடர்புபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது. எனக்கும் சமூக உணர்வு இருக்கின்றது. கந்துவட்டிகாரர்களுடன் சேர்ந்து கொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை. குறும்படங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நான் புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டேனா ?

பொது நலன் கருதி திரைப்படம் வெற்றியடைய வாழத்துகிறேன். என்றார்.