3 படங்களிலும் ஒரே மெசேஜ்.. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடூரம்.. பார்த்திபன் பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

கடந்த வாரம் சித்தார்த் நடித்து தயாரித்த ‘சித்தா’ மற்றும் மம்முட்டி நடித்த ’கண்ணூர் ஸ்குவாட்’, இந்த வாரம் வெளியான விஜய் ஆண்டனியின் ’ரத்தம்’ ஆகிய மூன்று படங்களும் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூர ரணங்கள் குறித்து கூறியுள்ளதாகவும், அந்த மூன்று படத்தையும் அடுத்தடுத்து தான் பார்த்துள்ளதாகவும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:

நேற்று ‘சித்தா’ மற்றும் ‘கண்ணுர் ஸ்குவாட்’, முன்தினம் ’ரத்தம்’ ஆகிய மூன்று படங்களிலும் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூர(ண)ங்கள். மம்முட்டி சார் ஹைஸ்பீடில் கிளாப் அள்ளுகிறார். ’ரத்தம்’ படத்தை கண்டதிர்ந்தேன். விஜய் ஆண்டனி தன் பெண் குழந்தையோடு நடப்பதை கூட, வெறும் நடிப்பாக பார்க்க இயலாமல் கண்ணீரம் துடைத்தேன். குற்றவாளி பெண் என்பதால் மன்னிக்கலாம் என்ற மனிதாபிமானமும் கண்டேன்.

’சித்தா’ கரைத்து விட்டது மனதை. இதுவொரு எமோஷனல் படம். இயக்குனரைதான் பாராட்ட வேண்டும். அவரை விட, நடிகர் சித்தார்த்தை விட, தயாரிக்க தயாரான தாயான சித்தார்த்தின் மனதை பாராட்ட வேண்டும். கருணையை கழட்டி வைத்து விட்டு சட்டம் தன் சுத்தியலால் ஓங்கியடித்து, சிறு துண்டுகளாக நறுக்கி உப்பிட்டு ஊர் நடுவே ஊறுக்காயிட்டால் மட்டுமே இக்குற்றங்கள் குறையலாம்!!! அல்லது இப்படி தனி மனிதனே தண்டிப்பதை திரையில் கண்டு உறையலாம்.

இன்னமும் அரசும் போலீசும் சிக்கனலில் பிச்சையெடுக்கும் சிறுவர்களுக்கு பின்னுள்ள ரவுடிசத்தை முழுமையாக ஒழிக்கவில்லையே என்ற கவலை பாதி டிக்கட்டாய் இடபுறமுள்ள இதயத்தின் நடுபுறமுள்ள பாக்கட்டில்!!! என்று பதிவு செய்துள்ளார்.