பெங்களூரு இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல நடிகர் அதிரடி கைது..!

  • IndiaGlitz, [Tuesday,June 11 2024]

பெங்களூரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருந்தகத்தில் வேலை செய்து வந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏற்கனவே 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது 3 நபர்கள் ரேணுகா சுவாமி உடலை கொண்டு வந்து வீசி இருந்தது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து அந்த மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தபோதுதான் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இந்த விசாரணையின் அடிப்படையில் தான் தற்போது நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தர்ஷன் கைது செய்யப்பட்ட தகவலை பெங்களூர் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

ரேணுகா சுவாமி வேலை பார்த்து வந்த மருந்தகத்தில் நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி வேலை பார்த்து வந்ததாகவும் அவருக்கு கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமி அடிக்கடி மெசேஜ் அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கும் இந்த கொலைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.