நந்தினி அக்கா.. சோழர்களை முடிச்சுறு.. 'PS 2' ரிலீஸ் தினத்தில் மதுரையில் பரபரப்பு போஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,April 28 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் முதல் பாகத்தை விட சூப்பராக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் கலக்கி இருப்பதாகவும், ஐஸ்வர்யா ராயின் நந்தினி கேரக்டர் இரண்டாம் பாகத்தில் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தனது காதலன் வீர பாண்டியனை கொலை செய்த ஆதித்த கரிகாலன் கொல்ல வேண்டும் என்பதற்காக பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு சோழர்களின் ராஜ்யத்தில் நுழைந்த நந்தினி, சோழர்களை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டத்தை குந்தவை முறியடித்தாரா? வந்தியத்தேவன் யாருக்கு உதவியாக இருந்தார் என்பதுதான் ’பொன்னியின் செல்வன்’ நாவலின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாண்டிய நாட்டு தலைநகர் மதுரையில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ரிலீஸ் தினத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்’ என்ற தலைப்பில் உள்ள இந்த போஸ்டரில், ‘நந்தினி அக்கா.. பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கையே, கடைசி ஆயுதமே, உலகின் முதல் பெண் பாண்டிய அரசியான மீனாட்சி அம்மனோட அருள் ஆசியுடன் நம்மள சீண்டி பார்த்த சோழர்கள், இனிமேல் நம்ம பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சிடு’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மதுரை நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.