திருமண பேனர் வைப்பதில் தகராறு: வாலிபரை ஓட ஓட வெட்டி கொலை செய்த கும்பல்

  • IndiaGlitz, [Friday,May 11 2018]

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் திருமண போஸ்டர் ஒட்டும் தகராறு ஒன்றில் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மதன் என்பவர் மற்றொரு பகுதியை சேர்ந்த தனது நண்பரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் ஒன்றை வைத்துள்ளார். அந்த இடத்தில் இதுவரை அரசியல் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட பேனர் மட்டுமே வைத்திருந்த நிலையில் அந்த பேனரை அகற்றுமாறு மதனிடம் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தகராறு செய்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் பேனரை அகற்றிவிடுவதாக மதன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் எட்டுபேர் கொண்ட கும்பல் இன்று மதன் வீட்டுக்கு சென்று அவரை வெளியே வரும்படி அழைத்துள்ளனர். அவர் வராததால் அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். பின்னர் வெளியே வந்த மதனை குமரேசன் என்பவர் உள்பட எட்டு பேர் ஓட ஓட விரட்டி வெட்டி, அவர் வைத்த பேனர் அருகே அவரை கொலை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குமரேசன் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.