குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையரிடம் விசிக புகார்..!

  • IndiaGlitz, [Friday,November 24 2023]

சேரி மொழியை அவமதித்ததாக நடிகை குஷ்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் 'உங்களைப் போல சேரி மொழியில் எல்லாம் பேச முடியாது’ என்று பதிவு செய்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ’சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் அன்பு என்று அர்த்தம் என்றும், நான் அதை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தேன் என்றும் குஷ்பு விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் குஷ்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஷ்பு மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.