பார்த்திபன் போலீஸ் புகார் எதிரொலி.. 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்குப்பதிவு செய்த சிவ பிரசாத்..!

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘டீன்ஸ்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் செய்த சிவ பிரசாத் என்பவர் மீது இன்று காலை கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் சிவப்பிரசாத் தற்போது சென்னை நீதிமன்றத்தில் ‘டீன்ஸ்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கான கிராபிக்ஸ் பணியை கோவையை சேர்ந்த சிவப்பிரசாத் என்பவர் செய்துள்ளார். பார்த்திபன் - சிவ பிரசாத் ஆகிய இருவருக்கும் இடையிலான ஒப்பந்தப்படி கடந்த பிப்ரவரி மாதம் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அதற்கு 68 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.

முதல் தவணையாக ரூ.42 லட்சம் பார்த்திபன் கொடுத்த நிலையில் ஒப்பந்த செய்யப்பட்ட பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் சிவப்பிரசாத் பணியை முடிக்கவில்லை என்று கூறி காலதாமதம் செய்வதாக கோவை காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்தார். இதை புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்காமல் ‘டீன்ஸ்’ திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சிவபிரசாத் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சிவப்பிரசாத் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஒப்பந்தத்தில் பேசியதை விட அதிக கிராபிக்ஸ் வேலைகள் கொடுத்ததால் தான் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணியை முடிக்க முடியவில்லை என்றும் சிவ பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்