ஏஆர். ரஹ்மான் நிகழ்ச்சி போலவே ஒரு சொதப்பல்.. பாதியில் நிறுத்தப்பட்ட ஹரிஹரன் இசை நிகழ்ச்சி..!

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த போது அதில் கூடுதலாக டிக்கெட் வழங்கியதன் காரணமாக டிக்கெட் வாங்கியவர்கள் இசை நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்பதும், இதனால் ஏற்பட்ட கடும் எதிர்ப்பை அடுத்து ஏஆர் ரகுமான் டிக்கெட் பணத்தை திருப்பி தர ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏஆர் ரகுமான் நிகழ்ச்சியில் நடந்த சொதப்பல் போலவே தற்போது இலங்கையில் ஹரிஹரன் நிகழ்ச்சியில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண 25000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை ஆகி உள்ள நிலையில் இலவச பார்வையாளர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கி இருப்பதாக தெரிந்தது.

ஆனால் இலவச பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்த இளைஞர்கள் திடீரென கட்டணம் செலுத்தி வந்த பார்வையாளர்கள் மத்தியில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்திய நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறு எதுவும் இல்லை என்றும் இலவச பார்வையாளர்கள் உள்ளே நுழைந்ததால் பிரச்சனை ஏற்பட்டது என்றும் 20 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி தடைபட்டதாகவும் அதன் பின் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நன்றாக நடந்தது என்றும் ஆனால் சில தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பார்வையாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனக் குறைவே சொதப்பலுக்கு காரணம் என்றும் கூறி வருகின்றனர்.