பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்: மேலும் 5 ரசிகர்கள் பலி

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சித்தூர் மாவட்டம் குப்பம் என்ற பகுதியில் பவன் கல்யான் ரசிகர்கள் கட்அவுட் வைக்கும்போது மின்சார தாக்குதல் காரணமாக 3 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பவன்கல்யாண் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பவன் கல்யாண் நடித்து வரும் திரைப்பட குழுவினர் மறைந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் நிதியுதவி செய்யப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம் காரணமாக மூன்று பேர் பலியான அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவரது ரசிகர்கள் மீளாத நிலையில், தற்போது மேலும் 5 பவன் கல்யாண் ரசிகர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து விட்டு ஐந்து ரசிகர்கள் வாகனம் ஒன்றில் வீடு திரும்பும் போது திடீரென அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் ஐந்து பவன் கல்யாண் ரசிகர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம் காரணமாக மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளது பவன் கல்யான் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.