கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இது... விராட் கோலியின் உருக்கமான பதிவு!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடிகை அனுஷ்கா தம்பதியினர் இன்று தங்களுடைய 4 ஆம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது கடவுள் எங்களுக்கு அளித்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று விராட் கோலி பதிவிட்டு உள்ளார்.

நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து, கடந்த டிசம்பர் 11, 2017 இல் திருமணம் செய்துகொண்டனர். இத்தாலி நாட்டின் டஸ்கனியில் நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் பெரும் ஆச்சர்யத்தையும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கடந்த ஜனவரி 11,2021 இல் இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. வாமிகா எனப் பெயரிட்டு தற்போது ஒரு குடும்பமாக மாறியிருக்கும் நடிகை அனுஷ்கா- விராட் கோலி தம்பதிகள் தங்களது 4 ஆம் ஆண்டு திருமண தினத்தை உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்துப் பகிர்ந்துகொண்ட விராட் கோலி, என்னுடைய முட்டாள் தனமான நகைச்சுவைகளையும் சோம்பேறித் தனங்களையும் நீங்கள் நன்றாக கையாண்டீர்கள். அதோடு கடந்த 4 வருடங்களில் நானாக இருக்கும் நிலையில் என்னை ஏற்றுகொண்டு நேசித்து வருகிறீர்கள். கடவுள் நம் மீது பொழிந்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தின் 4 ஆண்டுகள் இது.

மேலும் நேர்மையான, அன்பான, துணிச்சலான பெண்ணை திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகிறது.. உலகம் முழுவதும் எதிராக நின்றாலும் சரியான விஷயத்தில் நிற்க என்னை தூண்டியவர் என தனது மனைவி அனுஷ்கா குறித்து நெகிழ்ச்சியோடு பதிவிட்டு உள்ளார்.


அதேபோல நடிகை அனுஷ்கா சர்மாவும் உணர்ச்சிகளுக்கு மத்தியில் இருவரும் சரிசமமாக வாழ்வது கடினம். அதற்கு பாதுகாப்பான துணை தேவை. அந்த வகையில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு வாழும் நாம் அதிர்ஷ்டசாலிகள் எனப் பதிவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அனுஷ்கா மற்றும் விராட் கோலி தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.