குடிபோதையில் மத்திய பெண் அமைச்சர் காரை பின் தொடர்ந்த 4 மாணவர்கள் கைது

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் காரை குடிபோதையில் பின்தொடர்ந்ததாக டெல்லி பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.,

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று புதுடெல்லியின் லுட்யென்ஸ் என்ற பகுதியில் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை இன்னொரு கார் வேகமாக துரத்தி வந்ததை அமைச்சரின் பாதுகாவலர்கள் கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு பாதுகாவலர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு மிக வேகமாக வந்த ரோந்து பணி காவலர்கள் அமைச்சரின் காரை பின் தொடர்ந்த காரை மடக்கி நிறுத்தினர். அந்த காரில் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், ஸ்மிருதி இரானியை பார்த்து, அருவறுக்கத்தக்க செய்கைகளை செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அதன் பின்னர் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரிகிறது. இதுகுறித்து மாணவர்கள் கூறியபோது அந்த காரில் அமைச்சர் இருந்தது தங்களுக்கு தெரியாது என்றும் தங்களுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினர். ஆயினும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் சென்ற காரும், அவர்களுடைய செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.