ரயில்வே தண்டவாளத்தில் வேகமாக வந்த கார்: போதையில் இளம்பெண் செய்த அட்டகாசம்!

  • IndiaGlitz, [Sunday,November 15 2020]

25 வயது இளம்பெண் ஒருவர் போதையில் ரயில்வே தண்டவாளத்தில் காரை மிக வேகமாக ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மாலகா என்ற பகுதியில் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் கார் ஒன்று மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் வேகமாக சென்ற அந்த கார் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்டு நின்றது. இதனை அந்த பகுதியில் இருந்த மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலம் பார்த்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதே நேரத்தில் காவல் துறையினரும் அந்த பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

சுரங்கப்பாதைகள் சிக்கியிருந்த காரை மீட்டபோது அதிலிருந்து 25 வயது பெண் ஒருவர் தள்ளாடியபடி எழுந்து வந்தார். அவர் முழு போதையில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை பரிசோதனை செய்ததில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமாக ஆல்கஹால் அவருடைய ரத்தத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

25 வயது இளம்பெண் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் மிக வேகமாக காரை ஓட்டி வந்த சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் ஆன்லைனில் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.