ஊட்டிக்கு பைக் டிராவல் சென்ற இளம் நடிகர்… கோர விபத்தில் சிக்கி வலது காலை இழந்த சோகம்!

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருந்து மறைந்த நடிகர் ராஜ்குமாரின் நெருங்கிய உறவினரும் தற்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருபவருமான இளம் நடிகர் சூரஜ்குமார் சாலை விபத்தில் சிக்கி தனது வலது காலை இழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தச் சம்பவம் திரையுலகினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருந்து மறைந்தவர் ராஜ்குமார். இவருடைய நெருங்கிய உறவினரும் தயாரிப்பாளருமான எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸ் என்பவரின் மகன் சூரஜ்குமார் ஒருசில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். 24 வயதான இவர் சினிமாவிற்காக துருவன் என்று பெயரையும் மாற்றிக்கொண்டுள்ளார். மேலும் இவர் கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவரும் சிவராஜ்குமாருக்கும் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சூரஜ்குமார் கடந்த சனிக்கிழமை அன்று ஊட்டியில் இருந்து மைசூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது கர்நாடகாவின் சாமராஜாகர் மாவட்டத்திலுள்ள குண்ட்லுபேட் எனும் பகுதிக்கு வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்துவதற்காக அவர் முயற்சித்ததாகவும் அப்போது நிலைதடுமாறி நடிகர் சூரஜ்குமாரின் கால் டிப்பர் லாரியிலேயே மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட நடிகர் சூரஜ்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது வலது முழங்காலுக்கு கீழே உள்ள பகுதி மோசமாக பழுதடைந்ததாக கூறிய மருத்துவர்கள் அவரது வலது முழங்காலுக்கு கீழே உள்ள பகுதியை மட்டும் அகற்றியதாகக் கூறப்படுகிறது.

கன்னட சினிமாவில் ‘ஐராவதம்’, ‘தாரக்’ போன்ற திரைப்படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய சூரஜ்குமார் பின்பு அனுப் ஆண்டனி இயக்கத்தில் உருவாக இருந்த ‘ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா‘ திரைப்படம் மூலம் ஹீரோவாக ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்தத் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது ‘ரத்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து பெயரிடப்படாத ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் சாலை விபத்தில் சிக்கி தனது வலது காலை இழந்துள்ளார். 24 வயதே ஆன இளம் நடிகருக்கு ஏற்பட்ட இந்த சோகம் தற்போது கன்னட சினிமா வட்டாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.